Maaveerar ninaivu

RSS Feed - Breaking Tamil News from Tamil Eelam

செவ்வாய், 9 நவம்பர், 2010

கவிதை எழுதலாம் 14




பாடம்14 ஓசை!

Posted in
இவ்வார ஈற்றடியைக் காண்பதற்குமுன் வெண்பாவின் ஓசை வகைகளைக் காண்போம்.

வெண்பா செப்பலோசையை அடிப்படையாகக் கொண்டது என்பது யாவரும் அறிந்த ஒன்றே. அச்செப்பலோசையின் உட்பிரிவாக "ஏந்திசைச் செப்பலோசை", "தூங்கிசைச் செப்பலோசை", "ஒழுகிசைச் செப்பலோசை" என மூன்று வகையுள்ளது.

1-ஏந்திசைச் செப்பலோசை:-

முழுக்க முழுக்க வெண்சீர் வெண்டளையான் இயன்ற வெண்பா ஏந்திசைச் செப்பலோசையாகும். (ஈற்றுசீர் கணக்கில் கொள்ளக்கூடாது ஆதலால் ஈற்றுச்சீரொழிய ஏனைய 14-சீர்களும் வெண்சீர் வெண்டளை கொள்ளுமாயின் அவ்வெண்பாவின் ஓசையை ஏந்திசைச் செப்பலோசை என் நம் பழம்புலவர்கள் வகைபிரித்துள்ளனர்)

பட்டுப்போல் பூவிழிகள் பார்த்திருந்தேன் பாவையவள்
சட்டென்றே தன்விழிகள் சாய்த்திருந்தாள் -எட்டிநின்றே
என்னெழிலை உள்வாங்கிப் புன்னகைப்பாள் யானவளைக்
கண்கொண்டுக் காணாதக் கால்! -அகரம்.அமுதா

செத்துவிடப் போகின்றாய் சேர்ந்தவர்கள் உன்னுடலை
மொய்த்துவிடப் போகின்றாய் மொய்த்தாலும் சற்றழுவார்
சுட்டுவிடப் போகின்றார் சூழ்நிலைக்குத் தக்கனவாய்
நட்டமென்ன வாழ்ந்துவிடு நன்கு! -புரட்சி தாசன்

குறிப்பு!

வெண்பாவைப் பொருத்தவரை இன்னிசையை வழங்கக் கூடிய சீர் காய்ச்சீரே ஆகும் என்பது பழம் புலவர்களின் கூற்று. வெண்பாவின் சில இடங்களில் ஓசை நன்கமையப் பெறுவதற்காக அளபெடையைக் கையாள்வர். தளை தட்டாவிடத்து அளபெடுத்தலால் அவ்வளபெடையை இன்னிசையளபெடை என்பர். கவனிக்க:-

கெடுப்பதூவும் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூவும் எல்லாம் மழை! திருக்குறள்

கெடுப்பதும் எனக்கொள்கினும் தளைதட்டாதாயினும் செய்யுளின் ஓசை நன்கமையப்பெற வேண்டும் என்பதற்காக உயிர் அளபெடுத்து வந்தது.

2-தூங்கிசைச் செப்பலோசை:-

இயற்சீர் வெண்டளை மட்டும் பயின்றுவரும் வெண்பா (மாமுன் நிரை விளமுன் நேர்) தூங்கிசைச் செப்பலோசை எனப்படும்.

பூட்டிய வீட்டில் புகையிலைக் குஞ்சிகள்
ஓட்டை வழியே உதிர்ந்தன -ஈட்டும்
குரலின் மொழியில் இருமல் முழக்கம்
விரலின் இடையில் விரல்! -பாடலாசிரியர் கபிலன்

கனிவாய் மெதுவாய்க் கனிவாய்; உணவாய்
உனையே தருவாய் உயிரே! -இனிநம்
இருவாய் ஒருவாய் எனவாக் கிடுவாய்
வருவாய் வரம்தரு வாய்! -அகரம். அமுதா

குறிப்பு:-

இம்முறை சற்றே கடினமானது என்பதால் இம்முறையைப் பலரும் கையாள்வதில்லை. (புதிதாய் வெண்பா எழுதுபவர்கள் யாரும் இம்முறையைக் கையாள வேண்டாம். பொருட்சிதைவு ஏற்படும் வாய்ப்புள்ளது.)

3-ஒழுகிசைச் செப்பலோசை:-

இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை ஆகிய இரு வெண்டளைகளும் கலந்துவரின் அவ்வெண்பாவின் ஓசை ஒழுகிசைச் செப்பலோசை ஆகும்.

காதல் புரிகின்ற காதலரோ(டு) ஒப்பிடுங்கால்
காதல் கவிதைகளே காசினியில் ஏராளம்
ஆதலினால் அஃதை அகற்றிக் குமுகாயப்
பேதமையைப் பாசெய் பெரிது! -அகரம்.அமுதா

நண்பர்களே! வெண்பாவில் பயின்றுவரும் செப்பலோசையின் உட்பிரிவுகளைக் கண்டோம். இம்மூன்றுவகைகளிலும் பயிற்சி மேற்கொண்டு பாடல் இயற்றிப் பார்க்கவும்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "கண்ணுற்றே நன்நெறியைக் காண்!"

ஏந்திசைச் செப்பலோசை அமையுமாறு அனைவரையும் பாடஅழைக்கிறேன்.

அகரம். அமுதா


ஈற்றடிக்கு வெண்பா எழுது!

அன்பன்என் பேரமுதா! ஆர்ப்பதெல்லாம் சீர்மரபே!
இன்னுமிரு பத்தெட்டை எட்டவில்லை; -மன்னும்
குணத்தமிழர் மாமரபு குன்றா துமக்கு
வணக்கங்கள் வைக்கின்றேன் வந்து!

என்னைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே சுட்டவும்!

நாம், இவ்வெண்பாப் பகுதியைத் தொடங்கி நடத்திவருவதன் நோக்கம் வெண்பா பயில இயற்ற வேண்டும் என்னும் விருப்பமிருந்தும் இலக்கணம் அறியாக் காரணத்தால் தங்கள் கனவு நிறைவேறாதிருக்கும் வலைப்பதிவர்களுக்கு வெண்பா பயிலவும் இயற்றவும் இலகுதமிழில் வேற்றுமொழி கலவா வெல்தமிழில் பயிற்றுவிப்பதே.

மரபை அறியும் மனமுடை யோர்க்காய்க்
குறையில்வெண் பாவைக் குறிப்பாய் -அறியத்
தருவ(து) அவாஎன் றனுக்கு!

விரித்தேன் வலையை விழும்மீன்என் றல்ல;
விரும்பித் தமிழை விரைந்தே -பருகும்
வலைப்பதி வாளர்க்காய் வந்து!

நம் "வெண்பா எழுதலாம் வாங்க!" வலைக்கு வந்துசெல்லும் அன்பர்களுக்கும் இனி வரவிருக்கும் அன்பர்களுக்கும் ஓர் நற்செய்தி! சற்றேறக் குறைய நம் வெண்பாப் பாடம் முடிவடையும் நிலையில் உள்ளது.

வெண்பாவின் இலக்கணத்தைக் கற்றுக்கொண்ட நாம் இனிவரும் பாடங்களில் வெண்பாவின் நுணுக்கங்கள் பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.

அவற்றைப் பாடமாகத் தருவதில் எப்பயனும் இல்லை. பாடமாகக் கொடுக்கப்படினும் அவ்வளவு எளிதில் மனதில் பதியாதாதலால் ஒவ்வொரு நுண்ணிய உட்பிரிவையும் விளக்கும் பாடத்துடன் அதுசார்ந்த ஈற்றடியையும் அப்பாடத்துடன் இணைக்கலாம் எனக்கருதுகிறேன்.

நான் அளிக்கும் நுட்பங்களை அவ்வீற்றடி கொண்டு நீங்கள் வெண்பாவாக்கும் போழ்து எளிதில் மனதில் பதிவதாயிருக்கும் எனக்கருதுகிறேன். இதற்கத் தங்களின் பேராதரவை எதிர்பார்க்கிறேன்.

"வெண்பா எழுதலாம் வாங்க" எனும்என்றன்
பண்பாய நல்வலையில் பங்கேற்க -நண்ப!உமை
அன்போ டழைத்தேன்; அழைப்புத் தனைஏற்றே
என்னீற் றடிக்குவெண்பா ஈ!

ஈற்றடிக்கு வெண்பா இயற்றும் விளையாட்டை
ஏற்று நடாத்துகிறேன் என்வலையில் -பாற்றொடுக்க
வாரீர் அலைகடலாய் வந்தேஉம் ஆதரவைத்
தாரீர் எனஅழைத்தேன் தாழ்ந்து!

வெண்பா எழுதத் துவங்கும் புதிதில் எதையெழுதுவது? எப்படி எழுதுவது? அப்படியே எழுதத்துவங்கினும் வெண்பா எழுத அதிகநேரம் பிடிப்பதோடு பொருட்சிதைவும் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற குழப்பங்களைத் தவிற்கவும் புதுப்புதுக் கருத்துக்களைக் கையாள எற்றவகையிலும் தங்களுக்கு எளிமைபடுத்தவே நாம் இப்பகுதியைத் துவங்கியிருக்கிறோம்.இதனையே அழைப்பாக ஏற்று அனைவரும் வாரீர். ஆதரவு தாரீர்.

பாவிற் சிறந்தவெண் பாவின் தளையறிந்தே
தாவின்றித் தீட்டத் தலைப்படுவோம் -கூவி
வருகவென் றார்ப்பரித்தேன்; வந்தா தரிப்பீர்;
வருந்தகையார் எல்லாரும் வந்து!

நாம் வெவ்வேறாயினும் ஒருவர் முகம் ஒருவர் அறிந்ததில்லை எனினும் நாம் ஒருமுகமாய்ச் செயல் படுவதால் நம் எழுத்துக்களில் நாளடைவில் சொற்சுவையும் பொருட்சுவையும் அமையப்பெருதலைக் கண்கூடாகக் காணலாம். நம் சொல்லாட்சியில் பாவுள் பொருளாட்சி செய்தலைக் காண்போம். நாம் என்பதே நன்மை.

நானென் றுரைத்தோர் நளிவுற்றுச் சீரயிந்துப்
போன திசையறியோம் பொய்யில்லை; -நானற்ற
நாமன்றோ நன்மை நவில்!

ஊற்றெடுக்கும் கற்பனையை ஒண்டமிழின் பாவகையுள்
ஏற்றமுறும் வெண்பாவில் ஏற்றிவைப்போம் -ஆற்றலுறும்
ஈற்றடியை யானளிப்பேன் ஈற்றடிக் கேற்றபடி
சாற்றிடுவீர் அன்பனெனைச் சார்ந்து!

இசைமிகு இன்றமிழில் ஏறார் நடைசெய்
வசையில்வெண் பாக்கள் வடித்து -நசையறு
நாற்றிசைக்கும் நம்புகழை நாமெடுத்துச் செல்வோம்என்
ஈற்றடிக்கு வெண்பா எழுது!

ஈற்றடியை வழங்குவதற்குமுன் வெண்பாவில் இடம்பெற வேண்டிய அடிப்படைத் தகுதிகளைச் சுருக்கமாகக் குறிப்பிடுதல் நலம் எனக்கருதுகிறேன்.

1-ஓரடிக்குள் மோனை நன்கமையப் பெறுதல்.
(பொழிப்புமோனை அமைத்தல் நன்று. அது முடியாத போது இணைமோனையோ ஒரூஉ மோனையோ அமைக்கலாம்) மேலும் மோனையைப் பற்றித் தெரிந்து கொள்ள இங்கே சுட்டவும்.

2-அடிதோறும் எதுகை அமைத்தல்.
(1,5,8-ம் சீர்களில் ஒத்த எதுகையும் 9மற்றும் 13-ம் சீர்களில் ஒத்த எதுகையும் அமைதல் வேண்டும்) எதுகையைப் பற்றி அறிய இங்கு சுட்டவும்.

3-அளவியல் வெண்பாவிற்கு மொத்தம் 15சீர்கள் வரும். ஒவ்வொரு சீரையும் தனித்தனிச் சொற்களைக் கொண்டு நிறப்புதல் வேண்டும்.

4-நேரிசை வெண்பா எனில் கட்டாயம் எதுகை எடுத்த தனிச்சீர் அமையப்பெறுதல் வேண்டும்.

5-இன்னிசை வெண்பா எனில் தனிச்சீர் ஒழிய அடிதோறும் எதுகை யமைத்தல் வேண்டும். (பெருவாரியாகத் தற்காலத்தில் இன்னிசை வெண்பாவில் இம்முறையையே கையாள்கிறார்கள்.)

மேற்கூறிய வெண்பாவிற்கான விதிமுறைகளை மனதில் ஏற்றிக்கொண்டு நம் வெண்பா எழுதலாம் வாங்க எனும் ஆடுதளத்தில் புகுந்து விளையாடிக் கலக்குவீர்களாக!

விளையாட்டைத் துவங்குமுன் தங்கள் அனைவரின் சார்பாகவும் தமிழ்வணக்கமும், கணபதி வணக்கமும் செய்துவடுகிறேன்.

சொற்சிலம்பம் ஆடத் துணிந்தோம்; புடம்பொட்டப்
பொற்சிலை போன்றவளே பூத்துவா! -மற்சிலம்பம்
ஆடிப் பகைவளர்க்கும் ஆசை எமக்கில்லை
பாடித் தமிழ்வளர்ப்போம் பார்!


கால்குலேட்டர் கைபோன் கணினிகடி காரமிவை
நாலும் உனக்களித்து நான்மகிழ்வேன்! -கோலக்
கணபதியே! வெண்பாக் கலக்க(ல்)விளை யாட்டில்
பிணக்கின்றிக் காப்பாய் பெரிது!


சரி. கணபதியையும் வணங்கியாகி விட்டது. இப்பொழுது வெண்பா விளையாட்டைத் துவங்குவோமா?

உமக்கான ஈற்றடி:- "வெண்பா விரித்தேன் விரைந்து!" -கலக்குங்க-

அகரம்.அமுதா


பாடம்13 பஃறொடை மற்றும் கலிவெண்பா!

Posted in

பஃறொடை வெண்பா:-

பஃறொடை வெண்பாவிலும் நேரிசை இன்னிசை என இருவகையுண்டு. பல தொடைகளாலும் ஆனமையால் பல்தொடை எனும்பேர் பெற்றுப் புணர்ச்சியின் காரணமாய் பஃறொடை வெண்பாவானது. இது நான்கடிகளுக்கு மிகுந்தும் பன்னிரண்டடிகளுக்கு மிகாமலும் வரும். பன்னிரண்டடிகளுக்கு மிகுமாயின் அது கலிவெண்பாவாகிவிடும்.

நேரிசைப் பஃறொடை வெண்பா:-

அளவடி வெண்பாவில் நாம்கண்டது போன்றுதான் எதுகையமைப்பு. ஒவ்வொரு இரண்டடிகளுக்கும் ஒரு தனிச்சீர் பெற்று வரும்.

காட்டு:-

ஆய்ந்தறிந்து கல்லதான் கல்வியும் ஆறறிவில்
தோய்ந்தறிந்து சொல்லாதான் சொற்பெருக்கும் -தீந்தமிழின்
சொல்லிருக்க வன்கடுஞ்சொற் சொல்வதூஉம் தன்மனையால்
இல்லிருக்க வேறில் இரப்பதூஉம் -நெல்லிருக்கக்
கற்கறித்து மண்டின்று காய்த்துக் களத்தடித்த
புற்கறித்து வாழ்வதனைப் போன்று!

நன்கு நோக்கவும். இரண்டடிகளுக்கு ஒருமுறை தனிச்சீர் பெற்றுவந்தமையால் இது நேரிசைப் பஃறொடை வெண்பா.

இன்னிசைப் பஃறொடை வெண்பா:-

இன்னிசைப் பஃறொடை பலவாறாய் வரும்.

1-அடியெதுகை பெறாமல் வரும்.
2-தனியெதுகை பெறாமல் வரும்.
3-எல்லா அடிகளிலும் தனிச்சீர் பெற்றுவரும்.
4-சிலஅடிகளில் தனிச்சீர் பெற்றம் பெறாமலும் வரும்.
5-சில அடிகளில் அடியெதுகை பெற்றும் பெறாமலும் வரும்.

இப்படிப் பலவாறாய்க் கூறலாம். ஆக இரண்டிரண்டு அடிகளுக்கோர் தனிச்சீர் பெறா பஃறொடை இன்னிசைப் பஃறொடையாகும்.

காட்டு:-

வையகம் எல்லாம் கழனியாம் -வையகத்துச்
செய்யகமே நாற்றிசையின் தேயங்கள் -செய்யகத்து
வான்கரும்பே தொண்டை வளநாடு –வான்கரும்பின்
சாறேயந் நாட்டுத் தலையூர்கள் -சாறற்ற
கட்டியே கச்சிப் புறமெல்லாம் -கட்டியுள்
தானேற்ற மான சக்கரை –மாமணியே
ஆனேற்றான் கச்சி யகம்!

அடிதோறும் எதுகை பெற்று இன்னிசையானமைகாண்க.

கலிவெண்பா:-

கலிவெண்பாவிலும் நேரிசைக் கலிவெண்பா இன்னிசைக் கலிவெண்பா என இருவகையுண்டு. பஃறொடை மிக்கது கலிவெண்பா ஆகும். அதாவது பன்னிரண்டடிகளுக்கு மிக்கது. பன்னிரண்டடிகளுக்கு மேல் எத்தனை அடிகாறும் வேண்டுமானாலும் செல்லலாம். வரையறை என்பதில்லை.

நேரிசைக் கலிவெண்பா:-

மற்ற நேரிசைவெண்பாக்களுக்குப் பார்த்த விதியே இதற்கும் பொருந்தும். இரண்டிரண்டு அடிகளுக்கோர் தனியெதுகை பெற்றுவரும்.

இன்னிசைக் கலிவெண்பா:-

நேரிசை வெண்பாவின் விதியாகிய இரண்டடிக்கோர் தனியெதுகை எடுத்தலை மீறிவிடின் அது இன்னிசைக் கலிவெண்பாவாகிவிடும்.

அகரம்.அமுதா


பாடம்12 அளவியல் வெண்பா!

Posted in
நான்கடிகளைக் கொண்டது அளவியல் வெண்பாவாகும். மூவடி முக்கால் அளவியல் வெண்பா என்கிறது தொல்காப்பியம்.

சிந்தியல் வெண்பா முதற்கொண்டு பின்வரும் அனைத்துவெண்பா வகைகளும் நேரிசை இன்னிசை என இருவகைப்படும்.

நேரிசை அளவியல் வெண்பா:-

நாலடி வெண்பாவில் முதல் இரண்டடிகளின் எதுகை பெற்ற தனிச்சீரை இரண்டாமடியின் ஈற்றில் (அதாவது 8ம் சீரில்) பெற்று வருவது நேரிசை வெண்பாவாகும். (ஆக நேரிசைக்கு இவ்வோர் விதியைத் தவிர வேறு விதிகள் கிடையாது.ஆதலால் இவ்விதியை மீறும் ஏனைய வடிவங்கள் இன்னிசையாக் கொள்ளப்படும்)

காட்டு:-

கோடிக் கவிஞருள் கோமகளே! நீயென்னைத்
தேடிக் களைப்புறவுஞ் செய்வேனோ? -நாடியெனைக்
கோத்தள்ளிக் கொஞ்சக் குறிப்பொன் றுரைப்பதெனில்
பாத்தென்றல் மாணாக்கன் பார்! -அகரம்.அமுதா

இவ்வெண்பாவைக் கவனித்தீரா? கோடி தேடி என்னும் அடியெதுகைக்குத் தனியெதுகை நாடி என வந்தமையால் இது நேரிசை வெண்பா.

(1,5,8ம் சீர்களில் எதுகையெடுத்து வந்தால் மட்டும் பொதாது. 9மற்றும் 13ம் சீர்களிலும் எதுகையமைய வேண்டும். 1,5,8 ம் சீர்களில் வந்த எதுகையே 9மற்றும்13ம் சீர்களில் வரவேண்டும் என்பதில்லை. வேறெதுகையும் பெற்றும் வரலாம். எதுகை பெற்று வரவேண்டும் என்பதே விதி.)

(1,5,8ல் எதுகை பெற்று 9மற்றும் 13ல் எதுகைபெற வில்லையெனில் அது இன்னிசைவெண்பாவெனக் கொள்ளப்படும்.)

இன்னிசை அளவியல் வெண்பா!

இன்னிசை வெண்பாக்கள் பலவகைப்படும்.

1-நாலடியிலும் ஒரேயெதுகையைப் பெற்று வருதல் (தனிச்சொல் மட்டும் இரா)
2-பல எதுகைகளைப் பெற்று வருதல்
3-அடிதோறும் தனிச்சீர் பெற்று வருதல்
4-இரண்டாமடியிலும் மூன்றாமடியிலும் தனிச்சீர் பெற்று வருதல்
5-மூன்றாம் அடியில் தனிச்சீர் பெற்று வருதல்

போன்றவை இன்னிசை வெண்பாக்களாகும்.

காட்டு:-

இன்னாமை வேண்டின் இரவெழுக -இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக -தன்னொடு
செல்லவது வேண்டின் அறஞ்செய்க -வெல்வது
வேண்டின் வெகுளி விடல். -நான்மணிக்கடிகை.

இது அடிதோறும் தனிச்சீர் பெற்றமையால் இன்னிசையானது.

கள்வமென் பார்க்குத் துயிலில்லை காதலிமாட்
டுள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள்
செய்வமென் பார்க்குந் துயிலில்லை அப்பொருள்
காப்பவர்க்கும் இல்லை துயில்! -நான்மணிக்கடிகை.

பல எதுகை பெற்று வந்தமையால் இன்னிசையானது.

மேலும் பல இன்னிசை அளவியல் வெண்பாக்களை அறிய இவ்விடம் கிளிக் செய்க!

குறிப்பு:-

1,5,8ம் சீர்களில் ஓரெதுகையும் 9மற்றும்13ல் ஓரெதுகையும் பெற்றோ அல்லது 1,5,8,9மற்றும்13ம் சீர்கள் ஒரே எதுகையான் அமைந்தோ வருவது நேரிசையாகும். இவ்விதிக்கு மாறுபட்ட யாவும் இன்னிசை வெண்பா வகை என்றே அறுதியிட்டுச் சொல்லிவிடலாம். ஆகையால் நேரிசை வெண்பாவிற்கான விதியை நன்கு தெரிந்து நினைவில் கொள்க.

ஒன்றைந்தோ டெட்டாம்சீர் உற்ற எதுகையெடுத்
தொன்பதாம் சீரும் பதின்மூன்றும் -நன்கெதுகை
கொண்டுவரின் நேரிசையாம்; கொள்ளாக்கால் மற்றவை
இன்னிசை என்றே இயம்பு! -அகரம்.அமுதா

நேரிசையென் பாரிதையே நேரிழையே! ஈற்றினில்
ஓரசையோ நாள்பிறப்போ ஓடிவரும் -ஓரடியில்
மோனை வரவேண்டும் மூன்றிரண்டில் நல்லெதுகை
தானமையச் சாற்றுதல்வேண் டும்! -பாரதிதாசன்

ஒன்றைந்தெட் டாகியசீர் ஒத்த எதுகையாய்
நின்றபதி மூன்றொன்பா னேரொத்து -நன்றியலு
நீடுசீர் மூவைந்தா நேரிசைவெண் பாவென்பர்
நாடுசீர் நாப்புலவர் நன்கு! -வீரசோழியம்


அகரம்.அமுதா


பாடம்11 சிந்தியல் வெண்பா!

மூன்று அடிகளைக் கொண்டது சிந்தியல் வெண்பாவாகும். ஈரடி முக்கால் சிந்தியல் வெண்பா என்கிறது தொல்காப்பியம்.

சிந்தியல் வெண்பாக்கள் இருவகைப்படும். அவை:- 1-நேரிசைச் சிந்தியல் வெண்பா 2-இன்னிசைச் சிந்தியல் வெண்பா ஆகும்.

1-நேரிசைச் சிந்தியல் வெண்பா:-

முதல் அடியின் முதற்சீரிலும் இரண்டாம் அடியின் முதற்சீர் மற்றும் நான்காம் சீர்லும் எதுகையமையப் பாடுவது.

காட்டு:-

நல்லார் உறவால் நலம்பெருகும் நாடோறும்
அல்லார் உறவால் அறந்தேயும் -பொல்லார்
தொடர்விடுதல் மேலாந் துணை!

இச்சிந்தியலில் முதற்சீர் ஐந்தாம்சீர் மற்றும் ஏழாம் சீர் எதுகையெடுத்து வந்தமை காண்க. அதாவது இரண்டாமடியின் கடைசிச் சீரில் எதுகையெடுத்துவருவது. ஆகையால் இது நேரிசைச் சிந்தியல் வெண்பா!

ஈரடியும் முக்காலும் ஏற்றுவரின் சிந்தியலாம்;
கூறடி மூன்று(ள்)தனிச் சீர்பெறலே -நேரிசையாம்;
ஊர்க்கிதை ஓதிடுவீர் ஓர்ந்து! -அகரம்.அமுதா

இன்னிசைச் சிந்தியல் வெண்பா:-

தனிச்சீர் பெறாமையும் அடியேதுகை பெறாமையும் இன்னிசை வெண்பாவாகும்.

அன்புற் றெவர்க்கும் அறனல்ல செய்யாது
தென்புற்று நன்குஞற்றுஞ் செம்மைத் திருவுடையார்
இன்புற்று வாழ்வ ரினது!

இச்சிந்தியலைக்கவனிக்க:- மூன்றடிகளிலும் எதுகை எடுத்து வந்திருப்பினும் தனிச்சொல் பெறாமையால் இன்னிசையானது. (தனிச்சொல் -இரண்டாமடியின் நான்காம் சீரில் எதுகையெடுத்தல். இதை இப்படியும் சொல்லலாம் வெண்பாவின் எட்டாம்சீர் எதுகைபெறாமை)

முன்புவெண் பாவுரைப்பேன் முப்பாவும் -பின்புரைப்பேன்
பூவிற் சிறந்தது தாமரை பொன்மயிலே!
பாவிற் சிறந்ததுவெண் பா! –பாரதி தாசன்.

இச்சிந்தியலை நன்கு கவனிக்கவும். முதற்சீர் (முன்பு -ன்) -எதுகையெடுத்துவந்து இரண்டாமடியின் முதற்சீரில் (ன்) -எதுகையின்மையால் இன்னிசையானது. மேலும் முதலடியின் முதற்சீரும் நான்காம் சீரும் எதுகையெடுத்து வந்துள்ளது. அப்படிவரின் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாது.

மேலும் முதற்சீரிலும் எட்டாம் சீரிலும் எதுகைபெற்றிருந்தும் ஐந்தாம் சீரில் எதுகை பெறாமையால் இன்னிசையுள் அடங்கிவிடுகிறது. (அனைத்து அடிகளிலும் எதுகையெடுத்து வராதவையும் இன்னிசைச் சிந்தியலேயாகும்.)

மேலும் இன்னிசைச் சிந்தியல் வெண்பாக்களை அறிய இவ்விடம் கிளிக் செய்க!

நேரிசைச் சிந்தியல் வெண்பாவின் இலக்கணம் 1,5,8-ம் சீர் எதுகை யெடுத்துவருவது கட்டாய விதி. இவ்விதியை மீறின் அது இன்னிசைச் சிந்தியலில் வைக்கப்படும்.

அகரம்.அமுதா


பாடம்10 குறள்வெண்பா!

ஒன்றே முக்கால் அடிகள் அதாவது ஏழு சீர்களைக் கொண்டது குறள் வெண்பா!

குறள்வெண்பா எழுதுகிற போழ்து கவனிக்க வேண்டியவை:-

வெண்பாவிற்கு மோனை எதுகைத்தொடைகள் முக்கியம் எனினும் குறள்வெண்பா இரண்டே அடிகளைக்கொண்டதால் நாம் குறிக்கவரும் கருத்தைத் தொடைகள் பொறுத்திக் கூறல் கடினம். ஆதலால் சில விதி தளர்த்தல்கள் உள்ளன. அவற்றை முதலில் காண்போம்.

1-குறள்வெண்பாவின் முதல் அடியில் பொழிப்புமோனையோ அல்லது ஒரூஉ மோனையோ அமைந்தால் நலம்.

2-இரண்டாமடியாகிய ஈற்றடியில் பொழிப்புமோனை அமையத்தான் வேண்டும் என்பதில்லை. அமையப்பெறின் நலம் அவ்வளவே.

விண்தேடும் வள்ளுவனார் வேட்ட குறள்முடியை;
மண்தேடும் தாளின் அடி! -அகரம்.அமுதா

இக்குறள்வெண்பாவை நன்கு கவனிக்க. இரண்டாமடியில் கூறவந்த பொருள் கருதி பொழிப்பு மோனை அமையப்பெறாது செந்தொடையான் இயன்றமை காண்க.

குறிப்பு:-

இதனால் பொழிப்பு மோனையின்றியே பாடவேண்டும் என்பதில்லை. பொருட்செறிவு குன்ற வலிந்து மோனை அமைக்கத் தேவையில்லை. அவ்வளவே.

3-முதலடியின் முதற்சீரிலும் இரண்டாமடியின் முதற்சீரிலும் எதுகை அமையத்தான் வேண்டும் என்பதில்லை. அமையப்பெறின் நலம்.

4-முதலடியின் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் ஒரூஉ எதுகை அமையபாடுவது.

வேய்ங்குழலோ? கிள்ளை மொழிதானோ? சேய்தன்
குரலோ? இதுயாழோ? கூறு! -அகரம்.அமுதா

இக்குறளை நன்கு கவனிக்க. முதலடியின் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் எதுகை பெற்றமையால் அடியெதுகை அமையாது வந்தமை அறிக.

5-வெண்பாவில் பொதுவாக நேரிசை இன்னிசை என இருவகை உண்டெனினும் குறள்வெண்பா இரண்டே அடிகளைக்கொண்டமையால் இன்னிசை நேரிசை என்னும் பாகுபாடு கிடையாது.

6-மிகுந்த பொருட்செறிவுடன் கூடிய கருத்துக்களை எடுத்துவைக்கும் போது தொடைகள் பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை.

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குறிய னாகச் செயல்! திருக்குறள்.

இக்குறள் வெண்பாவை நோக்குக. முதலடியில் மோனைத்தொடையோ எதுகைத்தொடையோ அமையப்பெறவில்லை. அடியெதுகையும் அமையவில்லை. இரண்டாமடியின் முதற்சீரும் இரண்டாம் சீரும் மோனைபெற்று இணைமோனை மட்டுமே வந்துள்ளது.

குறிப்பு:-

இவைபோன்று இன்னும் பன்முறைகள் இருப்பினும் தற்காலத்தில் குறள்வெண்பாவிலும் பொழிப்புமோனை அடியெதுகை இரண்டும் அமையப்பாடுவதே சிறப்பாகக் கொள்ளப் படுகிறது.

காட்டு:-

சீரடி மூன்றால்பார் தீரஅளந் திட்டான்மால்;
ஈரடி போதும் இவர்க்கு! -அகரம்.அமுதா

ஆக குறள் வெண்பாவில் மோனை எதுகை அமையப் பாடிவிடின் அளவியல் வெண்பாவில் மோனைஎதுகை அமைத்துப் பாடுவது மிக எளிதாகிவிடும். இப்பாடத்தைப் படிப்போர் குறள்வெண்பாவில் உள்ள சந்துபொந்துகளில் நுழைய முற்படாமல் முடிந்தவரை மோனை எதுகை அமையப்பாட வேண்டுகிறேன்.

அகரம்.அமுதா


பாடம்9 வெண்பா ஓர் அறிமுகம்!


ஓசை:-

பழம் புலவர்கள் ஓசை வேறுபாடு கொண்டே பா வேறுபாடு கண்டனர். செப்பலோசை அகவலோசை துள்ளலோசை தூங்கலோசை என செய்யுலோசை நான்கு வகைப் படும்.

வெண்பாவில் பயின்றுவரும் ஓசை செப்பலோசை. இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை ஆகிய இருதளைகளாலும் அமையப்பெருவது செப்பலோசையாகும்.

செப்பலோசை -இருவர் உரையாடல் போன்ற ஓசை!

வெண்பாவும் அதன் இனமும்:-

1-குறள்வெண்பா -இரண்டு அடிகளைக்கொண்டது.
2-சிந்தியல் வெண்பா -மூன்று அடிகளைக்கொண்டது.
3-அளவியல் வெண்பா -நான்கு அடிகளைக்கொண்டது.
4-பஃறொடை வெண்பா -5அடியிலிருந்து 12அடிகளைக்கொண்டது.
5-கலிவெண்பா -12அடிகளுக்கு மேற்பட்ட அடிகளைக்கொண்டது.

-என வெண்பா 5 வகைப்படும்.

ஓரடி முக்கால் குறள்வெண் பாவே
ஈரடி முக்கால் சிந்தியல் வெண்பா
மூவடி முக்கால் அளவியல் வெண்பா
பலவடி முக்கால் பஃறொடை வெண்பா
பஃறொடை மிக்கது கலிவெண் பாவே!

-தொல்காப்பியம்!

வெண்பா எழுதும் போது கவனிக்கவேண்டியவை:-

வெண்பாவில் இயற்சீர் நான்கும் (தேமா புளிமா கருவிளம் கூவிளம்) வெண்சீர் நான்கும் (தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்) மட்டும் வரும்.

ஈற்றடி சிந்தடியாகவும் (மூன்று சீர்கள் கொண்டது சிந்தடி) மற்ற அடிகள் அளவடிகளாகவும் (நான்கு சீர்கள் கொண்டது அளவடி) வரவேண்டும்.

வெண்பாவின் அளவடிகளில் பொழிப்ப மோனை வரவேண்டும். சிறுபான்மை ஒரூஉ மோனையும் வரலாம். சிந்தடியாகிய ஈற்றடியிலும் பொழிப்பு மோனை வரவேண்டும்.

ஈற்றடியின் இறுதிச்சீர் நாள் மலர் காசு பிறப்பு இவற்றிலொன்றைப் பெற்று முடிதல் வேண்டும்.

குறிப்பு:-

நாம் அடுத்தடுத்த பாடத்தில் 5வகை வெண்பாக்களைப் பற்றியும் தனித்தனியாக அறிய விருக்கிறோம். ஆகையால் கண்ணில் படும் வெண்பாக்களையெல்லாம் இதுவரை நாம் கற்ற இலக்கணத்தின் படி இருக்கிறதா? என்பதை உற்று நோக்குக! ஐயமிருப்பின் கேள்விகளைக் கேட்கத் தயங்காதீர்கள்.

நாளும் ஓர் வெண்பா வீதம் மனனம் செய்வீர்களே யானால் வெண்பா எழுதுவது மிக இலகுவாகி விடும்.

பொருட்செறிவுமிக்க அழகிய வெண்பா தருகிறேன். முடிந்தவரை படித்து மனனம் செய்யவும்.
மனனவெண்பா!

அறம்தகளி; ஆன்ற பொருள்திரி; இன்பு
சிறந்தநெய்; செஞ்சொல்தீ; தண்டு -குறும்பாவா
வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு! -நப்பாலனார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக