Maaveerar ninaivu

RSS Feed - Breaking Tamil News from Tamil Eelam

செவ்வாய், 9 நவம்பர், 2010

கவிதை எழுதலாம் 2


பாடம்2 அசை!

முதற்பாடத்தில் பார்த்த ‘குறில்’ ‘நெடில்’ ‘ ஒற்று’ ஆகிய மூவகை எழுத்துக்களால் ஆவது அசை. அவ்வசை நேரசை நிரையசை என இருவகைப்படும்.

வாய்பாடு - எழுத்து - அசை
க - குறில் - நேர்
கல் - குறிலொற்று - நேர்
கா - நெடில் - நேர்
காண் - நெடிலொற்று - நேர்

கட - குறிலிணை -நிரை
கடல் - குறிலிணை ஒற்று -நிரை
தடா - குறிநெடில் - நிரை
தடால் -குறிநெடிலொற்று - நிரை

மேற்காணும் குறில் நெடில் ஒற்று என்ற மூவகை எழுத்துக்களால் ஆனவை குறில்
குறிலொற்று
குறிலிணை
குறிலிணைஒற்று

குறிநெடில்
குறிநெடிலொற்று
நெடில்
நெடிலொற்று --- ஆகியவை.

இக்து -
க -குறில் 95க்கும் -எடுத்துக்காட்டு
கா -நெடில் 133 க்கும் -எடுத்துக்காட்டு
ல் -ஒற்று 19 க்கும் -எடுத்துக்காட்டு

விளக்கம் :-
புகைவண்டியிலும் மோட்டார் வண்டியிலும் சிறுவர்களுக்கு மதிப்பின்மை போல (பணம் இன்றி பயணம் செய்வதைப் போல ) யாப்பிலக்கணத்தில் ஒற்றுக்களுக்கு மதிப்பில்லை.

‘கல்’ என்பதில் உள்ள ‘ல்’-க்கு மதிப்பில்லாதது போல ‘ஈர்க்’ என்பதில் உள்ள ‘ர்க்’ -க்கும் (இரண்டு ஒற்றுக்கும்) மதிப்பில்லை.

ஓரெழுத்தால் ஆகிய அசை நேரசை.
ஈரெழுத்தால் ஆகிய அசை நிரையசை.

நேர் -தனி .
நேரசை –தனியசை.
நிரை –இணை.
நிரையசை –இணையசை.

குறிலே நெடிலே குறிலிணை குறிநெடில்
தனித்தும்ஒற் றேடுத்தும் வரின்நேர் நிரைஎனும்
அசையாம் அவைநாள் மலர்வாய் பாடே.

எ.காட்டு
அசை வாய்ப்பாடு
நேர் - நாள்
நிரை - மலர்

நேரசைக்கு உரிய நான்கு எழுத்துக்களுக்கும் நாள் வாய்பாடு.
நிறையசைக்கு உரிய நான்கு எழுத்துக்களுக்கும் மலர் வாய்பாடு.


எ.காட்டு
சொல் -அசை -வாய்பாடு
க -நேர் -நாள்
கண் -நேர் -நாள்
கா -நேர் -நாள்
காண் -நேர் -நாள்

கட -நிரை -மலர்
கடல் -நிரை -மலர்
படா -நிரை -மலர்
படார் -நிரை -மலர்

குறிப்பு:-
நேரசைக்குரிய நான்கு எழுத்துக்களையும் நிரையசைக்குரிய நான்கு எழுத்துக் களையும் நன்கு மனனம் செய்க.
எ.காட்டு.
காடு கா / டு -நேர் /நேர்
வாழ்க வாழ் /க -நேர் / நேர்
பனங்கள் பனங் /கள் -நிரை /நேர்
நிலாக்குறி நிலாக் /குறி நிரை /நிரை
நண்டு நண் /டு நேர் /நேர்

இப்படிப் பல சொற்களையும் எழுதிப் பயிற்சி செய்யவும்.

‘திருக்குறள்’ ‘கருவாடு’ ‘மணப்பாறை’ ‘தொல்காப்பியம்’ இவற்றை அசை பிரித்துக் காட்டுக.

குறிப்பு:-
‘க’ என்னும் குறில் நேரசை எனப்படினும் தனிக்குறில் முதலில் நேரசை ஆகாது. பின்வரும் குறிலை அல்லது நெடிலைச் சேர்த்துக்கொண்டு குறிலிணையாகவோ குறிநெடிலாகவோ வரும்.

எ.காட்டு:-
வணக்கம் வணக் /கம் -நிரை /நேர்
விடாமல் விடா /மல் -நிரை -நேர்
அலுவலகம் அலு /வல /கம் -நிரை /நிரை /நேர்

வணக்கம் என்பதில் ‘வ’ என்னும் ‘ண’ என்னும் குறிளுடன் சேர்ந்து குறிலிணையாக வந்தமை காண்க.

குறிப்பு:-
நெடிலுக்குப் பின்வரும் தனிக் குறிலும் ஒற்றுக்குப் பின்வரும் தனிக் குறிலும் நேரசை ஆகும்.

எ.காட்டு:-
மாரி மா /ரி நேர் /நேர்
வாழ்க வாழ் /க நேர் /நேர்

‘மா’ என்னும் நெடிலுக்குப் பின்னுள்ள ‘ரி’ என்னும் குறிலும் ‘வாழ்’ என்னும் நெட்டொற்றுக்குப் பின்னுள்ள ‘க’ என்னும் குறிலும் நேரசை ஆவதைக் காண்க.

குறில் குறிலொற்று நெடில் நேடிலொற்று என்னும் நான்கும் நேரசை.

குறிலிணை குறிலிணையொற்று குறிநெடில் குறிநெடிலொற்று என்னும் நான்கும் நிரையசை எனக் காண்க.

இப்படியே சிலப்பல சொற்களைப் பிரித்துப் பார்க்க.
மிண்டும் காண்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக