Maaveerar ninaivu

RSS Feed - Breaking Tamil News from Tamil Eelam

செவ்வாய், 9 நவம்பர், 2010

கவிதை எழுதலாம் 12




பாடம் 23 உயர்வு நவிற்சியணி!

Posted in
கவிஞன் தான் கூறப்புகும் கருத்தை மிகைப்படுத்தி உயர்த்திக் கூறுவதே உயர்வு நவிற்சியணியாகும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்!

பசியோடிருப்பவனுக்கு கூழ் இன்சுவை கூட்டுவதுதான். ஆயினும் அக்கூழுள் தன் சிறுகுழந்தையின் பிஞ்சுவிரல்கள் பட்டவுடன் அதன்சுவை அமிழ்தைவிடக் கூடிவிடுகிறது எனக் கூறுவது தான் கூறவந்த கருத்தின் முகாமையை விளக்குவதற்காக கவிஞன் மிகைப்படுத்துவதாகும். கூழின் சுவையை உள்ளது உள்ளபடி கூறாமல் அமிழ்தைவிட உயர்ந்த சுவைமிக்கது எனக் கூறுவது உயர்வு நவிற்சி அணியாகும்.


குழலினிதி யாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்!

இசைக்கு மயங்காதோர் யாருமிலர். ஆயினும் வள்ளுவர் ஈன்றசேயின் முகாமையையும் சிறப்பையும் எடுத்துரைக்க அதன் குரல் குழல் யாழைவிட இனியது என்கிறார்.

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது!

நாம் ஒருவர்க்கு உதவிசெய்யாதபோதும் நமக்குத் தேவைப்படுங்கால் நாம் அழைக்காமல் தானாய்வந்து உதவி செய்பவரின் உதவி சிறந்ததுதான். அவ்வுதவியின் தன்மையை உயர்த்திக் கூற நினைத்த வள்ளுவர் வையகத்தை வழங்கினாலும் ஏன் வானகத்தையே வழங்கினாலும் அவ்வுதவிக்கு ஈடாகாது என்கிறார்.

கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் -மெத்த
வெறும்பந் தயங்கூற வேண்டாம் புலவீர்!
எறும்புந்தன் கையாலெண் சாண்!

கல்வியின் சிறப்பை யாவரும் உணரவேண்டும் என்பதற்காக இதுவரை நாம் கற்றுமுடித்திருப்பது கையளவு. கற்காமல் விட்டிருப்பது உலகளவு என உயர்த்திக் கூறப்பட்டிருப்பதால் இப்பாடல் உயர்வு நவிற்சியணியாகும். (எறும்பும் தன்கையால் எண்சான் என்ற உவமை எவ்வுயிரும் அதனதன் கைகளால் எண்சாண் உயரம்தான் என்பதை உணர்த்த எடுத்துக்காட்டப் பட்டிருப்பதால் இவ்வீற்றடி எடுத்துக்காட்டு உவமையணியாகும்.)

ஆக உள்ளது உள்ளபடி உரையாமல் மிகைப்படுத்திக் கூறுவனயாவும் உயர்வு நவிற்சியணியாகும்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "சோம்புவதால் உய்வுண்டோ சொல்!"
அகரம்.அமுதா


பாடம் 22 இயல்பு நவிற்சியணி!

Posted in
ஓர் மங்கைக்கு சிறப்பு சேர்ப்பது அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு போன்ற குணங்கள் என்பர் ஆன்றோர். அதுவே அழகுமாகும். அவ்வழகை மென்மேலும் மெருகேற்றுவது அகத்தூய்மையும் புறத்தூய்மையும் ஆடை அணிகலன்களுமாகும். அதுபோல மரபுப்பாக்களுக்கு பெருமையும் சிறப்பும் சேர்ப்பன இலக்கண அமைப்பும் அழகிய வடிவமுமாகும். அவ்வழகை மென்மேலும் மெருகேற்ற நம்முன்னோர்கள் மரபுப்பா என்ற மங்கைக்கு அணிகளைப் பூட்டி அழகுபார்த்தனர். அவ்வழகைத்தான் அணியிலக்கணம் என்கிறோம்.

ஓர் பெண்ணிற்கு பொட்டு பூ போன்ற அணிகலன்கள் எத்துணை முகாமையோ அத்துணை முகாமையானது பாக்களுக்கு அணிஇலக்கணம். பெண் அணியும் அணிகளின் வகைகளைத் தெரிந்துகொண்டோமானால் அவற்றை எங்கெங்கு அணிய வேண்டும் என்பதும் தெரிந்து விடும். எடுத்துக்காட்டிற்கு மூக்கணி. இதை மூக்கணி என்று அறிவோமானால் அதை எங்கணிவது என்பதும் தெரிந்துவிடும். அதுபோல் பாக்களுள் கையாளப்படும் அணிவகைகளைத் தெரிந்துகொண்டோமானால் அவற்றைக் நம்கருத்தாழத்திற்கேற்ப தேவைக்கேற்ப கையாளத் தெரிந்தவர்களாகி விடுவோம்.

ஓர் கவிஞனை சிறந்த இலக்கியவாதி என இனம்காட்டுவது அவன் கருத்துகளைக் கையாளும் முறையே. அக்கருத்தைச் செறிவூட்டுவது அணியாகும். ஆக நாம் நம் கருத்துகளை அனைவரும் விரும்பும் விதமாக எடுத்துரைப்பதற்கு அணிவகைகளை ஆழமாகக் கற்பது முகாமையாகிறது.

அணிவகைகள் மொத்தம் முப்பத்தைந்து வகைப்படும். அவற்றுள்:- 1.இயல்பு நவிற்சியணி 2.உயர்வு நவிற்சியணி 3.உவமையணி 4.எடுத்துக்காட்டு உவமையணி 5.இல்பொருள் உவமையணி 6.உருவகஅணி 7.ஏகதேச உருவகஅணி 8.சொற்பொருட் பின்வரு நிலையணி 9.தற்குறிப் பேற்றணி 10.பிறிதுமொழிதலணி 11.வேற்றுமையணி 12.வேற்றுப்பொருள் வைப்பணி 13.வஞ்சப்புகழ்ச்சியணி 14.நிரல்நிறையணி 15.மடக்கணி 16.இரட்டுற மொழிதலணி. 17.எதிர்நிலை உவமையணி. 18.ஐய அணி. 19.ஒருபொருள் வேற்றுமையணி.

இயல்பு நவிற்சியணி:-நாம் கூறவரும் கருத்தை எவ்வகை உவமை ஏற்றியும் உரைக்காமல் மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளவாறே உரைப்பது உயர்வு நவிற்சியணி யாகும்.

காட்டு:-

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல(து)
அன்றே மறப்பது நன்று!

ஒருவர் நமக்கு செய்த உதவிக்கு நாம் என்றும் நன்றியுடன் நன்றிமறவாதிருக்கிறோம். நன்றிதனை மறப்பது நன்றல்ல என்பதை உணர்த்த வந்த வள்ளுவர் எவ்வுவமையையும் பயன்படுத்தாது உள்ளதை உள்ளவாரே உரைத்திருக்கிறார். உரைக்கவந்த கருத்தை உள்ளது உள்ளவாரே உரைத்துள்ளமையால் இப்பாடல் இயல்பு நவிற்சியணியாகிறது.

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக!

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவ தென்ப திழுக்கு!

வையகம் பகலிழப்ப வானம் ஒளியிழப்ப
பொய்கையும் நீள்கழியும் புள்ளிழப்ப -பையவே
செவ்வாய் அன்றில் துணையிழப்பச் சென்றடைந்தான்
வெவ்வாய் விரிகதிரோன் வெற்பு!

கதிர்சாயுங்கால் பாரில் பகல்வேளை நீங்கி இரவு பிறப்பதும் வானம் ஒளியிழந்து இருள்சூழ்வதும் குளங்களிலும் மற்ற நீர்நிலைகளிலும் இரைதேடும் பறவைகள் அவற்றை நீங்கித்தன் கூட்டையடைவதும் இயல்புதானே. ஆக கதிர்மறையும் மாலைப்பொழுதை அப்படியே உள்ளது உள்ளவாறே படம்பிடித்தாற்போல் காட்டியுள்ளமையால் இப்பாடல் இயல்பு நவிற்சியணியாகும்.

கூறப்புகுங் கருத்தை எவற்றோடும் ஒப்புமைப் படுத்தாமல் இயல்பாக நவில்வது இயல்பு நவிற்சியாகும்.

இயல்பு நவிற்சியணியைப் பயன்படுத்தி இக்கிழமைக்கான ஈற்றடிக்கு வேண்பா எழுத அழைக்கிறேன்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "தீயிற் கொடியதோ தீ!"
அகரம்.அமுதா


பாடம் 21!

Posted in
மூவாயிரம் நான்காயிரம் ஆண்டுகளாகக் கோலோச்சி வந்த மரபுக் கவிதை வடிவிற்கு இருபதாம் நூற்றாண்டு ஓர் மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. புதுக்கவிதை வடிவும் அதற்குப் பின்வந்த நவீன, பின்நவீன வடிவங்களும் மரபின் சல்லிவேர்களை செற்கள்போல் அரித்தன என்றால் அது மிகையாகாது.

இச்சிக்கல்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு எதிர்நீச்சலிட்டு முன்னேற மரபு தன்நோக்கையும் போக்கையும் மாற்றிப் புதுப்பொலிவுடன் வலம்வந்து கொண்டிருப்பதும் கண்கூடு.

இருபதாம் நூற்றாண்டில் மரபுக் கவிதை பெரும் பின்னடைவைக் கண்டதெனினும் மரபுவடிவான வெண்பாவிற்குச் சிறிதும் பின்னடைவில்லை என்றே கூறலாம். கரணியம் அதன் வடிவ அமைப்பும் எதையும் எளிதிற் பொட்டிலடித்தாற்போல் கூறும் துணிவுமிக்க ஆற்றலும்தான்.

இருபதாம் நூற்றாண்டில் புதுமைப் பித்தர்கள் தோன்றிப் புதுக்கவிதைக்குக் கொடிபிடிக்குங்கால் வெண்பா ஓசைபடாமல் தன்போக்கையும் நோக்கையும் மாற்றிக்கொண்டு பேச்சிவழக்குச் சொற்களைக் கொண்டு, "கருத்து, உணர்ச்சி, கற்பனை, அழகியவடிவம்" என்ற இலக்கியத்திற்குத் தேவையான நான்கு அணிகளையும் களைந்துவிட்டு எளியமுறையில் மிகமிக எளியமுறையில் தளைகள்மட்டும் மாறாமல் தன்னைப் புதுப்பித்துக்கொண்டது.

இவ்வெளியமுறை வெண்பாக்களை முதன்முதலில் கையாண்டவர் புதுமைப்பித்தன் எனலாம்.

பண்ணாத ரௌசெல்லாம் பண்ணிவெச்சி இன்னிக்குக்
கண்ணால முன்னா கசக்குதா -அண்ணாத்தே
ஆத்தாவந் தாலுன்னை அடுப்பில் முறிச்சிவெப்பா
போயோன் தொலைஞ்சிபோ யேன்!

இவரைத் தொடர்ந்து வெகுசிலரே இவ்வெளியமுறை வெண்பாக்களைச் செய்திருக்கிறார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆகாசம்பட்டு சேசாசலம்.

தோணிக்குக் கீழ தொளையா இருப்பதிலும்
பானைக்குக் கீழ இருப்பதிலும் - நாணயமா
புல்லாங் குழல்துளையா என்னை இருக்கவிடேன்
எல்லாமும் வல்லஇறை வா!

சேசாசலம் அவர்கள் தன் வெண்பாத்திறத்தால் மிகமிக எளிய நிகழ்வுகளையும் வெண்பாவாக்கியுள்ளார். காலைக்கடன் கழிப்பது பற்றிக்கூட பாடியுள்ளார் என்றால் பாருங்களேன்.

பாதையோரம் பட்ட பகலில் பழுத்தபழம்
வீதியில ராவுல பொம்பளைங்க! - நாதியில்லா
ஒத்தயடிப் பாதையில ஒக்காரும் வாண்டுக
மத்ததுக தோப்பு தொரவு!

தாமிரக் காசுகளைத் தண்டவாளத் தில்வெச்சி
நாம பதுங்க ரயில்நசுக்கும் - ராமய்யா!
கால ரயிலோட நாமெல்லாங் காசானோம்
வாலிபம்போய் ஆச்சே வயசு!

அவரைத்தொடர்ந்து தஞ்சை இனியனும் எளியவழக்குச்சொல் வெண்பாக்களைப் புனைந்துள்ளார்.

பங்கலா கார்கனவில் பட்டினிகள் போக்கிடலாம்
மங்கலான ஆடைபோதும் வாழ்ந்திடலாம் - அங்கங்கே
சிங்கிய டிக்கின்ற செந்தமிழா! படித்து
சிங்கார சென்னைவந்து சேர்!

ஏரிகளே சென்னை இருதயங்கள் நீர்சப்ளை
லாரிகளே செங்குருதி நாளங்கள் -நீரின்றிப்
பூண்டி புயலேரி பொய்த்துவிட்டால் ஆலயத்தில்
ஆண்டவன் கூட அழுக்கு!

இம்முறையில் நானும் பல முயற்சிகளைச் செய்துபார்த்துள்ளேன்.

ஹோம்வொர்க்கைச் செய்து முடித்தவுடன் ஓடிப்போய்
கேம்ஆட டி.விரிமோட் கேட்டாக்கா -வீம்போட
சீரியல் பார்க்கணுண்ணு சீறுகிறாள் என்மம்மி
போரடிக்குதே வாழ்க்கை போ!

குட்டைப்பா வாடை கொழுத்த தொடைகாட்ட
வட்டணிந்த மார்பின் வளங்காட்டி -வட்டுடைகீழ்
ஆதார மில்லா அரும்பாகம் காட்டுமவள்
சேதார மில்லா சிலை!

வீட்டைவைத் தேனும் விதைநெல்லை வித்தேனும்
காட்டைவைத் தேனும் கடஞ்சொல்லி -ஏட்டில்கை
நாட்டைவைத் தேனும் வெளிநாடு போயென்றன்
பாட்டைக் குறைப்பதற்குப் பார்!

எம்.ஏ படிச்சதற்(கு) ஏற்றவேலை வேண்டுமென்று
சும்மாத் திரிந்தால் சுகப்படுமா? -பம்மாத்துக்
காட்டாமல் கைக்குக் கிடைத்தவேலை பார்த்தால்தான்
வீட்டில் கிடைக்கும் மதிப்பு!

நேர்பிடித்து ‘கீவில்’ நிதமுமே நிண்ணாலும்
நீர்வருமோ கார்ப்பரே ஷன்குழாயில்? -பார்த்தாக்கா
காத்துவரும்; காத்தோட சத்த(ம்)வரும் நீர்க்குமிழி
பூத்துவரும் பாத்துட்டு போ!

வாராத நீர்க்கு வரிசையிலே நிண்ணுப்பா(ள்);
தேராத வார்த்தைகளால் திட்டிப்பா(ள்); -நேராய்
அடிச்சிப்பா(ள்); மண்டை உடைச்சிப்பா(ள்); சிண்டைப்
பிடிச்சிப்பா(ள்) கொத்தாகப் பிய்த்து!
இப்படிப் பலமுயற்சிகள். அனைத்தையும் காண விரும்புவோர் எனது தமிங்கிலிஷ்.காம் -இல் காணலாம்.

மேலும் சிற்சிலர் இம்முறையில் வெண்பாக்கள் செய்துள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சுசாதா அவர்கள் தம் கற்றதும் பெற்றதும் தொடரில் குறிப்பிட்டு எழுதியும் வந்துள்ளார்.

நீங்களும் இவைபோன்ற வற்றை முயன்று பார்க்கலாம். சிறப்பாக வருபவற்றை மறுமொழியில் இடவும்.

இவ்வாரத்திற்கான ஈற்றடி:- "அச்சமடம் நாணம் பயிற்பு!"
அகரம்.அமுதா


பாடம்20 நிரல்படுத்து வெண்பாக்கள்!

Posted in
பொருளின் பெயர்களையோ நூலின் பெயர்களையோ ஏனைய பெயர்ச்சொற்களையோ மக்களின் நினைவில் நிற்பதற்கென்று சில வழிமுறைகளைக் கையாள்கிறோம். அவற்றுள் ஒன்று வெண்பாவில் தொகைபடுத்துதல்.

ஓரின நூல்களை நினைவுகொள்ளவும் ஒன்றைப் படித்தபின் அடுத்ததைப் படிக்கவும் நூலகங்களில் இன நூல்களை வரிசைபடுத்தி அடுக்கவும் இப்பட்டியல் செய்யப்பட்ட வெண்பாக்கள் பயன்படும். பழநூல்கள் அழியாமல் பாதுகாக்கவும் நூல்பற்றிய ஆராய்ச்சிக்கும் இவ்வகை வெண்பாக்கள் பெரிதும் பயன்படுகின்றன.

காட்டு:-

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பருதி பரிமே லழகர் –திருமலையர்
மல்லர் பரிப்பெருமால் காளிங்கர் வள்ளுவர்நூற்
கெல்லையுரை செய்தா ரிவர்! -பழம்பாடல்

இப்பாடலைப் பாருங்கள்:- வள்ளுவரின் திருக்குறளுக்கு முற்காலத்தில் யார்யார் உரைகண்டிருக்கிறார்கள் என்பதைப் பட்டியலிட்டிருக்கிறது.

சக்கரவா கம்கிளிஆந் தைநாரை அன்னம்க
ரிக்குருவி கௌதாரி காடைஅன்றில் -கொக்கு
குயில்கருடன் காக்கைபுறா கோழிஇரா சாளி
மயில்கழுகு கோட்டான்வெள வால்! -அழகிய சொக்கநாத பிள்ளை

இப்பாடலில் பறவைகளின் பெயர்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

வெங்காயம் தக்காளி வெள்ளரி பீக்கம்ப
ரங்கி புடலைவெண்டி அத்திமு -ருங்கைவாழை
கொத்தவரை கோசு குடைமிளகு பூசுணை
கத்தரி பீன்ஸ்பாகற் காய்! -அகரம்.அமுதா

தென்னை விளாமுருங்கை தேக்கு பலாமூங்கில்
புன்னை அகில்களா பூவரசு -வன்னிகொன்றை
ஆலரசு பாக்கிலந்தை ஆத்தி கமுகுகரு
வேலம்மா வாழைபனை வேம்பு! -அகரம்.அமுதா

முன்னிரு வெண்பாக்களில் காய்கறிப் பெயர்களையும் மரங்களின் பெயர்களும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

ஆத்திசேர் கொன்றை அழகுதமிழ் மூதுரை
பாத்திசேர் நல்வழி பண்புலகம் -பூத்த
நறுந்தொகை நன்னெறி ஏழும் குழந்தைக்
குறுந்தமிழ் என்றறிந்து கொள்! -வ.சுப.மாணிக்கனார்

இவற்றைப்போல் நிரல்படுத்த வெண்பாக்களை நீங்களும் செய்துபார்க்களாம். சிறப்பாக வரும் வெண்பாவைப் பின்னூட்டத்தில் இடுமாறும் கோருகிறேன்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "நாளை நமதென்றே நம்பு!"
அகரம்.அமுதா


பாடம்19 அசைச்சீர்!

பொதுவாக வெண்பாவின் ஈற்றடியின் இறுதிச்சீர் நாள்மலர் காசு பிறப்பு என்னும் நான்குள் ஒன்றைப்பெற்று இறும். இதுவே வகுப்புமுறையாகும்(விதி).

காட்டு:-

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
அங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
அங்கண் உலகளித்த லான்!

லான் -நாள்

கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் -மணங்கொண்டீண்
டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே
டொண்டொண்டொண் ணென்னும் பறை!

பறை -மலர்

கன்னின்றான் எந்தை கணவன் களப்பட்டான்
முன்னின்று மொய்யவிந்தார் என்னையர் -பின்னின்று
கைபோய்க் கணைஉதைப்பக் காவலன் மேலோடி
எய்போல் கிடந்தானென் ஏறு!

ஏறு -காசு

அள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ
வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப் -புள்ளினம்தம்
கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேற் கோக்கோதை நாடு!

நாடு -காசு

கழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று மாற்றார்
அழலெடுத்த சிந்தையராய் அஞ்சத் -தழலெடுத்த
போராழி ஏந்தினான் பொன்மலர்ச் சேவடியை
ஓராழி நெஞ்சே! உவந்து!

உவந்து -பிறப்பு

ஆனால் இவ்விதியை மீறும் விதமாக ஈற்றடியின் ஈற்றுச்சீரில் தனிக்குறிலை நேரசையாக சீராக்கிப் புதுமைசெய்தனர்.

காட்டு:-

கையொத்து நேர்கூப்பு க!
பூப்பெய்தேன் என்னவியப் பு!
கல்லாற்சொற் றேறலொழி க!
குக்கலிச்சிக் குங்கலைச்சிக் கு!

இவ்வீற்றடிகள் அனைத்தையும் நோக்குக. தனி குறில் ஈற்றுச்சீராகி நாள்வாய்பாடெடுத்தமை.

பிற்காலத்தில் இன்னோர் வழக்கமும் மேலோங்கத்துவங்கியது. அது:- காசு பிறப்பு வாய்பாட்டைத் தேமா புளிமாபோல் (உகரப் புனர்ச்சியை நீக்கி) கொள்வது.

சின்னஞ் சிறுவயதில் தேர்ந்த உணர்வினுக்கே
என்னபொருள் என்றேநான் இன்றுணர்ந்தேன் -அந்நாளில்
முத்தென்று சொல்லுதிர்த்த மோகக் கவிதையெழில்
சித்திரத்தாள் பாராமல் சென்றாள்! -கண்ணதாசன்

வெண்பாவிதிப்படி சென்று என்றே முடிக்கவேண்டும். சென்று எனமுடிக்கப்படின் பொருள் முற்றுப்பெறாது என்பதால் சென்றாள் எனமுடிக்கப்பட்டமை காண்க.

பல்லாண்டு நீர்வாழப் பண்பார்ந்த பைந்தமிழின்
சொல்லாண்டு பாடுகிறேன் தூயவரே! -இல்லாண்டு
செய்யும் தொழிலாண்டு சேரும் புகழாண்டு
வையத்துள் வாழ்வாங்கு வாழ்க! -அகரம்.அமுதா

வாழ் அல்லது வாழ்வு என இறவேண்டும் என்பதே விதி. தமிழர்தம் பண்புப்படி வாழ்க என்று வாழ்த்துவதே மரபாகும். தன்னைவிடச் சிறியவரையும் வாழ்த்தும் போழ்து வாழ்க என்பரேயன்றி வாழ் என்று வாழ்த்தும் மரபு தமிழரிடமில்லை. ஆதலால் வெண்பாவின் விதி (பண்பாடு கரணியமாக) தளர்த்தப்பட்டிருக்கிறது.

இக்கிழமைக்கான ஈற்றடி:- உள்ளிருள் நீக்கும் ஒளி!

அகரம்.அமுதா


பாடம்18 முடுகியல்!

Posted in
பாவகை நான்கினுள் வெண்பா எழுதுதல் மிகக்கடினாகும். அதுபோல வண்ணப் பாடல்கள் செய்வதும் மிகக்கடினமாகும். புதுமையோடும் செழுமையோடும் வீறுநடைபோட்டு வரும் வெண்பாவில் புதுமை நோக்கோடு நம் பழம்புலவர்கள் வண்ணத்தைப் புகுத்தி வெண்பா இயற்ற முற்பட்டனர். இவ்வாறு வெண்பாவுள் வண்ண யாப்பு பயிலும் பாக்களை முடுகியல் வெண்பாக்கள் என்றழைத்தனர்.

முடுகியல் வெண்பாக்கள் இருவகைப்படும். அவையாவன 1- முற்றுமுடுகியல் வெண்பா 2- பின்முடுகியல் வெண்பா.

முற்றுமுடுகியல்:-

மேகநிற மான்மருக வீறுதணி கேசவிது
வாகடின மேவுமிவ ளாவியருள் -வாகுவளை
நத்தத்தத் திற்பற்றி நச்சுப்பைக் குட்டத்து
நிர்த்தத்திற் கிச்சித்த நீர்! -யாரோ

இவ்வெண்பா முழுமுடுகு வெண்பாவாக அமைந்துள்ளமை நோக்குக.
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன தானதன –தானதன
தத்தத்தத் தத்தத்த தத்தத்தத் தத்தத்த
தத்தத்தத் தத்தத்த தா!

என்னும் வண்ணத்தைக் கொண்டியன்றது அப்பாடல்.

முற்றுமுடுகியல் வெண்பாவைக் காட்டிலும் பலராலும் பின்முடுகியல் வெண்பாக்களே அதிகம் பாடப்பட்டு வந்துள்ளது.

காட்டு:-
நடையூறு சொன்மடந்தை நல்குவதும் நம்மேல்
இடையூறு நீங்குவதும் எல்லாம் -புடையூறும்
சேனைமுகத் தாளிரியச் சீறுமுகத் தூறுமதத்
தானைமுகத் தானைநினைத் தால்! -புறப்பொருள் வெண்பா மாலை!

இவ்வெண்பாவை நன்கு உற்று நோக்குக. இறுதி இரண்டுவரிகள்
தானதனத் தானதனத் தானதனத் தானதனத்
தானதனத் தானதனத் தா! –என்னும் வண்ணத்தோடு முடிந்துள்ளமை காண்க.

இப்பிறப்பை நம்பி இருப்பாரோ? நெஞ்சகமே!
வைப்பிருக்க வாயில் மனையிருக்கச் -சொப்பனம்போல்
விக்கிப்பற் கிட்டக்கண் மெத்தப்பஞ் சிட்டப்பைக்
கக்கிச்செத் துக்கொட்டக் கண்டு!

இப்பட்டினத்தார் பாடலை நோக்குக. இறுதி இருவரிகள் வல்லெழுத்துகள் மிகுந்து வண்ணத்துடன் அமைந்திருத்தல் காண்க.

அரங்கநாதக் கவிராயர் என்போர் பின்முடுகியலில் வேறோர் புதுமையையும் செய்துள்ளார். வெண்பாவில் முகன்மையாகப் பயின்றுவரும் வெண்டளையை நீக்கி வண்ணத்தோடு செய்திருப்பதே அது.

மையல்கொண் டாளுன்மீது வந்தணைவாய் இப்போதே
செய்யவள்சேர் திண்புயவி நாயகனே! -தொய்யில்
முலைபசத்து குழலவிழ்ந்து மொழிமறந்து விடவயர்ந்து
மலைவுகொண்டு நிலைமயங்கி மான்!

இவ்வெண்பாவை நன்கு நோக்குக. இறுதி இருவரிகளில் வண்ணம் பயிலலால் வெண்டளை நெகிழ்தலை.

இதுவோர் புறமிருக்க காளமேகப் புலவர் மேலுமோர் புதுமையைச் செய்துள்ளார்.வெண்பா முழுவதும் வல்லினம் மிகப் பாடுவதுதான் அப்புதுமை.

காட்டு:-
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க -கைகைக்குக்
காக்கைக்கு கைக்கைக்கா கா!

தத்தித்தா தாதுதி தாதூதி தத்துதி
துத்தித் துதைதி துதைத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது!

இவ்விரு வெண்பாவும் முழுக்க முழுக்க வல்லினம் மிகுந்து வந்தமை காண்க. இதுபோல் மெல்லினம் இடையினம் மிகவும் பாடி அசத்தியுள்ளார்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- மெய்யடா மெய்யடா மெய்!

அகரம்.அமுதா


பாடம்17 சவலை வெண்பா!

Posted in
இக்கிழமைக்கான ஈற்றடியைப் பாடத்தின் இறுதியில் (கீழே) காணலாம்.
பொதுவாக (அளவியல் வெண்பாவைப் போருத்தவரை) 15சீர்கள் அமையப்பெறுதல் வேண்டும். 15சீர்கள் கொண்ட அளவியல் வெண்பாவில் ஒருசீர் குறைந்து 14சீர்களாகவோ ஒருசீர் கூடி 16சீர்களாகவோ வரின் அவ்வெண்பாவைச் சவலை (ஊனம்) வெண்பா என்பர்.

மாமுன் நிரையும் விளமுன் நேரும் காய்முன் நேரும் வருதல் வெண்பா வகுப்புமுறையாகும் (விதி). இவ்வகுப்பு முறைக்கு மாறாய்த் தளைகொள்ளும் வெண்பாக்களையும் சவலை வெண்பா என்பதே சரியாகும்.

காட்டு:-

அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவல்ல
நட்டாலும் நண்பல்லர் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும்!

அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவர்இவரைத்
தேவரைப் போலத் தொழுக என்பதே
யாவரும் கண்ட நெறி!

இவ்விரு வெண்பாக்களையும் உற்று நோக்குங்கால் இடையில் விடுபட்ட இடத்தில் எவ்வொரு சொல்லையும் இட்டுநிரப்ப முடியாதாகையால் அவை சவலை வெண்பாக்கள் எனப்படும்.

சொற்செறிவு பொருட்செறிவு கரணியமாய் இதுபோன்ற வரையறையை மீறியவற்றையும் ஏற்றுக் கொள்ளப் பட்டது. ஆனால் தற்காலத்தில் இதுபோன்ற சவலை வெண்பாக்கள் புனைவது வழக்கொழிந்து போனதால் இதுபோன்ற வற்றை முயலவேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- இட்டவடி நோவும் இவட்கு!

குறிப்பு:-

"இட்டவடி நோகும் இவட்கு!" என எழுதுதல் வழுவாகும். "இட்டவடி நோவும் இவட்கு!" எனும் ஈற்றடிக்கு எழுத அனைவரையும் அழைக்கிறேன்.

அகரம்.அமுதா


பாடம்16 தலையாகு எதுகை!

இக்கிழமைக்கான ஈற்றடியைப் பாடத்தின் இறுதியில் (கீழே) காண்க!

பொதுவாய் வெண்பாவின் அடிதோறும் முதற்சொல்லின் முதலெழுத்தாம் மோனைக்கு அடுத்த எழுத்தாகிய எதுகை அமைந்தால் போதும் என்பது விதி. மோனை எதுகை என்பது செய்யுளின் நயத்திற்காகச் செய்யப்படுவது. அந்நயத்தை மேலும் மெருகேற்ற தலையாகெதுகை பயன்படுகிறது.

அடிதோறும் முதற்சொல்லின் முதலெழுத்தைத் தவிர பின்வரும் அனைத்து எழுத்துகளும் ஒன்றிவருவதைத் தலையாகு எதுகைஎன்பர். இத்தலையாகு எதுகை செய்யுளின் நயத்தை மென்மேலும் இனிமையாக்கும்.

பொதுவாக மொழிவளமும் ஆளுமையும் தலையாகு எதுகை அமைப்பதற்கு இன்றியமையாததாகிறது. ஆகையால் தலையாகு எதுகை அமைப்பதில் அதிக கவனம் தேவை.

காட்டு:-

சட்டம் இயற்றிச் சதுராடி வேற்றுமொழிக்
கொட்டம் அடக்கத்தான் கூறுகிறேன் -திட்டம்
வகுக்கத்தான் வேண்டும் வளர்தமிழின் மாண்பைப்
தொகுக்கத்தான் வேண்டும் தொடர்ந்து! -அகரம்.அமுதா

இவ்வெண்பாவை நன்கு கவனிக்கவும். முதலடியின் முதற்சீரும் இரண்டாமடியின் முதற்கடைச் சீர்கள் முதலெழுத்தொழிய ஏனைய எழுத்துகள் ஒன்றிவந்தமை காண்க. மேலும் மூன்றாமடியின் முதற்சீரும் நான்காமடியின் முதற்சீரும் அஃதேபோல் ஒன்றிவந்தமை காண்க.

குறிப்பு:-

இவ்வெண்பாவின் மூன்றாம் நான்காம் அடிகளை நன்கு கவனிக்கவும். மூன்றாம் நான்காம் அடிகளின் முதற்சீர்கள் மட்டுமல்லாது அதற்கடுத்த சீர்களும் ஒன்றிவந்துள்ளது அல்லவா? அப்படி வருதல் செய்யுளுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும்.

மதுக்கடைகள் மூடி வளம்சேர் தமிழ
முதுக்கடைகள் செய்ய முனைவீர் -புதுக்கடையால்
தாழும் பிறமொழிகள் தங்கத் தமிழ்நாட்டில்
வாழும் தமிழ்மொழியும் வந்து! -அகரம்.அமுதா

இவ்வெண்பாவில் அடிதோறும் தலையாகெதுகை நன்கமைந்தமை காண்க.

சொன்முன் னெழுத்தொழிய ஏனை எழுத்தெலாம்
நன்கொத்து நின்று நடந்தால் அதனைத்
தலையா(கு) எதுகையெனச் சாற்று! -அகரம்.அமுதா

இக்கிழமைக்கான ஈற்றடிக்குத் தலையாகு எதுகையை ஓரிடத்திலாவது அமைக்க முயலுக.

இக்கிழமைக்கான ஈற்றடி:- உழவின்றி உய்யா(து) உலகு!

அகரம்.அமுதா


பாடம்15 எதுகை!

இக்கிழமைக்கான ஈற்றடியைப் பாடஇறுதியில் (கீழே) காணலாம்.

பொதுவாக வெண்பாவில் இரண்டடிக்கு ஒரு எதுகையிட்டு எழுதுவது வழக்கம். ஆற்றல் மிக்கவர்கள் வெண்பாவின் அடிதோறும் ஒரே எதுகையைக் கையாண்டு முடிப்பதும் உண்டு. எதுகையைக்கையாண்டு எழுதுவதால் பாடல் இன்னிசையோடு விளங்குவதால் எதுகையைச் சிறப்பிக்க ஓரெதுகை வெண்பா(ஒரு விகர்ப்ப வெண்பா) ஈரெதுகை வெண்பா (இருவிகர்ப்ப வெண்பா) என்றும் வகைப்பிரித்து வழங்குவர்.

1-ஓருறழ்ச்சி வெண்பா (ஒரு விகர்ப்ப வெண்பா), (உறழ்ச்சி -வேறுபாடு)

வெண்பாவில் வரும் அடிகள் முழுவதும் ஒரே அடியெதுகையைக் கொண்டு முடியுமானால் அதை ஓருறழ்ச்சி(ஒருவிகர்ப்ப) வெண்பா என்றழைப்பர்.

காட்டு:-

பூக்காடு நேர்தமிழைப் போற்றிப்பாத் தென்றல்செய்
பாக்காடு தான்காடு மற்றெல்லாம் -சாக்காடு;
சீக்காடு; முட்காடு; தீக்காடு; முக்காடு;
நோக்காடு மற்றரைவேக் காடு! -அகரம்.அமுதா

இவ்வெண்பாவை நன்கு நோக்குக. அடிதோறும் அமைந்துள்ள எதுகை க்-என்ற ஒரே எழுத்தை எதுகையாகக் கொண்டமைந்தமையால் இவ்வெண்பா ஓரெதுகை(ஒருவிகர்ப்ப) வெண்பா எனப்படும்.

தரும்வெண்பா தன்னில் தனிச்சீர் முதலாய்
இரு(ம்)அடிகள் ஒத்த எதுகை -பெறின்அஃதை
ஓருறழ்ச்சி என்றே உணர்! -அகரம்.அமுதா

குறிப்பு:-

தரும்வெண்பா தன்னில் தனிச்சீர் முதலாய் - நேரிசை வெண்பாவில் மட்டுமே தனிச்சீரையும் சேர்த்து ஒருறழ்ச்சியா, ஈருறழ்ச்சியா என்பதைக் கணக்கிடவேண்டும். இன்னிசை வெண்பாவெனில் அடிதோறும் வரும் எதுகைகளை மட்டும் மனதில் கொண்டு ஒருறழ்ச்சியா ஈருறழ்ச்சியா எனக் கண்டால் போதும்.

2-ஈருறழ்ச்சி வெண்பா (இருவிகர்ப்ப வெண்பா)

இரண்டடிக்கு ஓரெதுகை என்ற விகிதத்தில் வெவ்வேறு எதுகைகளைக் கொண்டுவருவது ஈருறழ்ச்சி வெண்பா எனப்படும்.

பெண்டகை யாட்றன் பிறங்கும் அழகையெல்லாம்
கொண்டகையாற் றொட்டுக் குதுகளித்தேன்! -கொண்டலைப்போற்
கூத்தாடும் நுன்னிடையில் கூத்தாடக் கட்டில்மேல்
பூத்தாடிற் றின்பம் புலர்ந்து! -அகரம்.அமுதா

இவ்வெண்பாவை நன்கு கவனிக்கவும். முதல் இரண்டடியில் ண் -எதுகையாகவும் அடுத்த இரண்டடிகளுக்கு த் -எதுகையாகவும் வந்தமையால் இவ்வெண்பா ஈருறழ்ச்சி வெண்பா எனப்படும்.

குறிப்பு:-

ஈருறழ்ச்சி வெண்பா என்பது சிந்தியல் அளவியல் (நேரிசை, இன்னிசை) வெண்பாக்களுக்கு மட்டுமே பொருந்தும். பஃறொடை மற்றும் கலிவெண்பாக்களில் இரண்டிரண்டு அடிகளுக்கு ஓருறழ்ச்சி வருமானால் அதை பல உறழ்ச்சி (பலவிகர்ப்பம்) என்பதே சரியாகும்.

வருமடிகள் நான்காய் வளரும்வெண் பாவில்
இருவடிகட் கோரெதுகை ஏற்று -வரின்அஃதை
ஈருறழ்ச்சி என்றே இயம்பு! -அகரம்.அமுதா

ஈற்றடி வழங்கும் நேரம்:-

திரு முகவை மைந்தன் இராம்குமார் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர் சொன்னார்:- கற்பனைத் திறத்தையும் புலமைத்திறத்தையும் காட்டுவதற்காக ஈற்றடி வழங்குவதை விட்டுவிட்டு அன்றாடம் நாட்டில் நடந்தேறும் முகன்மை நிகழ்வுகளை வெண்பாவாக்கும் விதமாக ஈற்றடி வழங்கலாம் அல்லவா? என்றார்.

அவர் கூற்று எனக்கும் சரிஎன்றே பட்டது. நீங்களே ஒரு நிகழ்வைச் சொல்லுங்களேன் என்றேன்.

அணுவாற்றல் ஒப்பந்தம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அதற்கேற்றாற்போல் ஈற்றடி வழங்கலாமே என்றார்.

ஈற்றடி உண்டேல் இயம்பு! என்றேன் நான். அவர் நல்கிய ஈற்றடிகள் இதோ:-

அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

அணுவாற்றல் வேண்டும் அறி!

நாம் இவ்விடம் இரண்டு ஈற்றடிகளைப் பதிவு செய்கிறோம். அமெரிக்காவுடன் அணுஒப்பந்தம் நல்லதே எனக்கருதுபவர்கள், ''அணுவாற்றல் வேண்டும் அறி!'' என்ற ஈற்றடிக்கும் வேண்டாம் எனக்கருதுபவர்கள், ''அணுவாற்றல் வேண்டாம் அகற்று'' என்ற ஈற்றடிகளுக்கும் வெண்பா வடிக்க வாரீர் வாரீர் என வரவேற்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக