Maaveerar ninaivu

RSS Feed - Breaking Tamil News from Tamil Eelam

செவ்வாய், 9 நவம்பர், 2010

கவிதை எழுதலாம் 11


பாடம்3 சீர்!

இரண்டாம் பாடத்தில் பார்த்த அசைகளில் அசைகள் இரண்டு அல்லது மூன்று சேர்ந்து வருவது சீர் ஆகும். அப்படி வரும்சீர் ஈரசைச்சீர் அல்லது மூவசைச்சீர் என இருவகைப்படும்.

1 ஈரசைச்சீர்

நேர் நிரை என்னும் இரு அசைகளையும் பெருக்கினால் (2x2-4) ஈரசைச்சீர்கள் கிடைக்கும்.

அவை:-

நேர் நேர் -தேமா
நிரை நேர் -புளிமா இவ்விரண்டுச் சீரும் மாச்சீர் எனப்படும்.

நிரை நிரை -கருவிளம்
நேர் நிரை -கூவிளம் இவ்விரண்டுச் சீரும் விளச்சீர் எனப்படும்.

நேர்நேர் தேமா நிரைநேர் புளிமா
நிரைநிரை கருவிளம் நேர்நிரை கூவிளம்
எனுமிவை நான்கும் ஈரசைச் சீரே!
-தொல்காப்பியம்

2- மூவசைச்சீர்
தேமா புளிமா கருவிளம் கூவிளம் நான்கினோடும் நேர் நிரை என்னும் இருஅசைகளையும் உழறினால் (பெருக்கினால்) (4x2-8) மூவசைச் சீர்களாகும்.

அவை:-

நேர் நேர் நேர் -தேமாங்காய்
நிரை நேர் நேர் -புளிமாங்காய்
நிரை நிரை நேர் -கருவிளங்காய்
நேர் நிரை நேர் -கூவிளங்காய் -என் நான்கு காய்ச்சீரும்

நேர் நேர் நிரை -தேமாங்கனி
நிரை நேர் நிரை -புளிடாங்கனி
நிரை நிரை நிரை -கருவிளங்கனி
நேர் நிரை நிரை -கூவிளங்கனி -என நான்கு கனிச்சீரும் கிடைக்கும்

குறிப்பு:-

நாம் காணவிருக்கும் வெண்பாப் பாடத்திற்கு மாச்சீர் இரண்டும், விளச்சீர் இரண்டும், காய்ச்சீர் நான்கும் மொத்தம் எட்டு சீர்களே தேவை என்பதால் கனிச்சீரை விட்டுவிடுவோம்.

இங்கே சில சொற்கள் தரப்பட்டுள்ளன. அசைபிரித்துப் பார்க்கவும். ஈரசைச் சீரா மூவசைச் சீரா என்பதையும் கவனிக்கவும்.

1.கணக்கு 2.கூப்பாடு 3.பண்பாடு 4.நல்லிணக்கம் 5.கட்டளை 6.இராக்கோழி 7.தண்ணீர் 8.பு+ம்புகார் 9.பாகற்காய் 10.செந்தமிழ்

குறிப்பு:-

சோல்லின் முதலில் ஐ-வரிசை எழுத்துக்களோ ஔ-வரிசை எழுத்துக்களோ வரின் அவ்வெழுத்துக்களை நெடிலாகத்தான் கொள்ளவேண்டும்.

எ.காட்டு:-

தையல் – தை/ யல் -இச்சொல்லில் ஐகாரம் சொல்முதலில் வருவதால் தை என்னும் எழுத்து நெடிலுக்குரிய இரண்டுமாத்திரைகளோடு வருவதைக் காண்க.

ஆனால் அதே ஐகாரமும் ஔகாரமும் சொல்லின் இடையிலோ கடையிலோ வரின் குறிலுக்கரிய மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும். (தன் மாத்திரை அளவினின்றுக் குறைந்துவருவதால் இதனை ஐகாரக்குறுக்கம் ஔகாரக்குறுக்கம் என்பர்)

எ.காட்டு:-

கையையெடு -கை /யையெ /டு இதில் கை ஓர் அசையாகவும் ‘யையெ’ என்னும் ஈரெழுத்தும் சேர்ந்து ஓர் அசையானதையும் காண்க. (ஔகாரம் சொல்லின் முதலிலன்றி சொல்லின் இடையிலும் கடையிலும் வராது. எனினும் ஔகாரத்திற்கும் பொருந்தும்)

கண்ணுடையார் -கண் ணுடை யார்
புண்ணுடையார் -புண் ணுடை யார்

காடைகௌதாரி -கா /டைகௌ/ தா /ரி என நான்கு அசைகளாக் பிரிந்தமை காண்க. ( ‘டைகௌ’ இவ்விரு நெடிலும் தன் மாத்திரை அளவிலிருந்துக் குறைந்துக் குறிலேபோல் வருவதைக் காண்க.)

இதுபோல் சில சொற்களைப் பிரித்துப்பார்க்கவும்.
1.தேனடை 2.கெண்டைமீன் 3. கொண்டைமுடி 4.கையுறை 5.கைப்பை

3.அசைச்சீர்

நேர் நிரை என்னும் இரண்டசையும் வெண்பாவின் ஈற்றில் தனிச்சீராக வரும். இதை அசைச்சீர் என்பர்.

எ.காட்டு:-

நேர் -நாள்
நிரை -மலர்

கற்கழனி போந்துக் கடிதுழைத்துச் சேறடித்து
நெற்கழனி யாக்கிவிடும் நேர்த்தியினார் -சொற்கழனி
நானுழ வேண்டியென்னை நட்டார்;பேர் முத்துசாமி
ஊனெடுத்த தேவன் உரு!
-அகரம்.அமுதா
-இவ்வெண்பாவின் ஈற்றுச்சீராகிய உரு -நிரையசையானதைக் காண்க தனியசையாக கவெண்பாவின் ஈற்றில் இச்சொல் வருவதால் அது மலர் என்னும் வாய்பாடெடுத்து வருவதறிக.

கற்றும் தெளியாமல் கற்றோர்பின் போகாமல்
நற்றமிழ்ப் பாப்புனையும் நாட்டமுற்றேன் -சற்றே
கருத்தவுடல்; நேர்வழியில் சிந்தனைகள்; காளைப்
பருவமியற் பேர்சுதாகர் பார்! -அகரம்.அமுதா

-இவ்வெண்பாவில் பார் என்கிற நேரசை வெண்பாவின் ஈற்றில் வருவதால் நாள் வாய்பாடெடுத்து வருவது காண்க.

என்போல் உழந்தார் இடர்?
என்றனுக் கிந்தநிலை ஏன்?
தாய்வழிப் பாட்டனைத் தான்! -இவ்வீற்றடிகளில் வரும் ‘இடர்’ ‘ஏன்’ ‘தான்’ போன்றவை நாள் அல்லது மலர் வாய்பாடெடுத்துவருதல் காண்க.


4.காசு, பிறப்பு!

முன்பு கண்ட நேரசை நிரையசைக் குரிய வாய்பாடாகிய நாள் மலர் என்னும் அசைகளோடு ‘குசுடுதுபுறு’ என்னும் வல்லின உகரம் சேர்ந்துவந்தால் நாள்- காசாகவும் மலர்- பிறப்பாகவும் மாறும்.

பழந்தமிழ்ப் புலவர்கள் காசு என்னும் நேரசையுகரத்தை நேர்பு என்றும் பிறப்பு என்னும் நிரையசையுகரத்தை நிரைபு என்றும் கொண்டனர்.

வெங்கானம் தானேகி வெந்துத் தணிந்தாலும்
மங்கைநான் முன்புற்ற மாசறுமோ? -பங்கமெல்லாம்
உற்றும் உயிர்வாழக் கற்றேனே! பெற்றவனால்
பெற்றேனே துன்பம் பெரிது!
-அகரம்.அமுதா
-இவ் வெண்பாவில் ‘பெரிது’ என்னும் (நிரைபு) பிறப்பு வாய்பாடைக்காண்க.

அழுது புலம்பி அவனிருதாள் பற்றித்
தொழுது துவண்டு; துடித்தேன் -உழன்றேன்
இனிப்புத்தான் என்மேனி என்றெறும்பாய் மொய்த்தான்
நினைக்கத்தான் கூசுதென் நெஞ்சு!
-அகரம்.அமுதா
-இவ்வெண்பாவில் நெஞ்சு என்னும் (நேர்பு) காசு வாய்பாடெடுத்தமை காண்க.


நேரசையுகரம் -நேரசையோடு (குசுடுதுபுறு) என்னும் வல்லின உகரம் சேர்ந்தது.
நிரையசையுகரம்- நிரையசையோடு வல்லின உகரம் (குசுடுதுபுறு) சேர்வது.

எ.காட்டு:-

பாடு காது ஊறு தேக்கு- நேரொடு வல்லின உகரம் சேர்ந்து (நேர்பு) காசு வாய்பாடெடுத்தல் காண்க.

கிழடு புணர்ந்து பிணக்கு விறகு நடாத்து நிரையொடு உகரம்சேர்ந்து (நிரைபு) பிறப்பு வாய்பாடெடுத்தல் காண்க.

நாள்மலர் காசு பிறப்பெனும் நான்கும்
வெண்பா வீற்றில் மேவிடுஞ் சீரே.
-தொல்காப்பியம்
குறிப்பு:-

நாள் மலர் என்பன வெண்பாவின் ஈற்றில் அன்றி வேறிடங்களில் வரா. காசு பிறப்பு இவ்விரண்டும்; வெண்பாவின் இடையில் வந்தால் தேமா புளிமா எனக் கொள்ளவேண்டும். வெண்பாவின் ஈற்றில் மட்டுமே காசு பிறப்பாக மாறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக